ம.இ.கா பரிந்துரை செய்யுமா ?

ம.இ.கா பரிந்துரை செய்யுமா ?

-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், அக்டோபர் 6, 2013.
m-kulasegaran2013 ஆம் ஆண்டு குற்றச் தடுப்பு சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட பொழுது, சில திடுக்கிடும் தகவல்களை உள்துறை அமைச்சர் வெளியிட்டார். அதன்படி நாட்டில் எல்லா இனத்தைச் சார்ந்தவர்களும் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருப்பதாகவும், ஆனால் அதில் அதிகமானோர் இந்தியர்கள் எனவும் தெரிவித்திருந்தார். குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்களில் மலாய்க்காரர்கள் 3 ஆயிரமாகவும், சீனர்கள் 9 ஆயிரமாகவும் இருக்கும் பட்சத்தில் , இந்தியர்கள் மட்டும் 29 ஆயிரம் பேர்கள் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மலேசியாவில் இந்தியர்களின் மக்கள் தொகை 10 சதவிகிதத்திற்கும் குறைவாக இருக்கும் பொழுது, எப்படி அவர்களின் குற்றச் செயல்கள் மட்டும் 60% எட்டியுள்ளது என்று நான் உள் துறை அமைச்சர் சாஹிட்டை இடை மறித்து கேள்வி கேட்டேன். அதோடு ஒரு கால கட்டத்தில் சிம்பாங் ரெங்கம் தடுப்பு முகாமில் 60% மேல் இந்தியர்களாக இருந்ததைப் பற்றியும் குறிப்பிட்டேன்.

அதற்குப் பதில் கூறிய உள்துறை அமைச்சர், அரசாங்கம் பல்வேறு அரசு சார இயக்கங்களுடனும், அரசியல் கட்சிகளுடன், இணந்து இந்த குற்றச் செயல்களுக்கான அடிப்படை  காரணங்களை ஆராய்ந்து அதனை குறைப்பதற்கான வழி முறைகளையும் தேடி வருவதாகவும் தெரிவித்தார்.


நாடு சுதந்திரமடைந்து 56 ஆண்டுகள் கடந்து விட்ட வேளையில், இன்னும் இந்த குற்றச் செயல்கள் குறைவதற்கான வழி முறைகளை அரசாங்கம் ஆராய்ந்து கொண்டிருப்பது வேடிக்கையானதும் வேதனைக் குறியதுமாகும். அதோடு சிறு பான்மை இனமான இந்தியர்களிடையே குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பது நாடு இன்னமும் சரியான முன்னேற்றப் பாதையில் செல்லவில்லை, மாறாக பின்னோக்கிச் செல்கிறது என்பதனை உணர்த்துகின்றது.

முன்னேற்றம் என்பது பொருளாரத்தை மட்டுமே சார்ந்ததில்லை. அமைதி, சுபீட்சம், சுகாதராம் பாதுகாப்பு  சுதந்திரம் இவை அனைத்தும் இருந்தால்தான் நாடு உண்மையில் சுதந்திரம் அடைந்துள்ளது என்று கூறலாம். குறிப்பாக குற்றச் செயல்களினால் நாட்டு மக்கள் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வெளியில் நடமாட முடியாத பொழுது நாடு முன்னேறி இருக்கின்றது என்று சொல்லுவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதற்கு சமமானதாகும்.


சுதந்திரத்திற்கு முன்பு இருந்ததை விட தற்பொழுது குற்றச் செயல்கள் பெருகியுள்ளது என்பது, இந்த அரசாங்கத்தின் திட்டங்கள் அதன் செயல் பாடுகள் இவற்றில் கோளாறுகள்  இருக்கின்றன என்பதனை தெளிவாகக் காட்டுகின்றன. அதுவும் இந்தியர்களைடையே குற்றச் செயல்கள் அவர்களின்  விகிதாரத்தை விட அதிகமாகவே இருப்பது இந்த அரசாங்கம் இந்தியர்களை தேசிய நீரோட்ட வளர்ச்சியில் இணக்க தவறிவிட்டது என்றே தைரியமாக கூறலாம்.

56 வருடங்கள் கழித்துமா இன்னும் இந்த இந்தியர்களின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த ஒரு வழிமுறையும் காணப்படவில்லை? இது இந்த அரசாங்கம் இந்தியர்ளின் குற்றச்செயல்களை ஒடுக்க ஒரு உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என்பதைக் குறிக்கின்றது. அப்படியே திட்டங்கள் ஏதும் இருந்திருந்தாலும் அதனை அவர்கள் ஒரு பொருட்டாகக் கருதி செயல்படுத்தவில்லை.

இந்தியர்களிடையே குறைந்த பிறப்பு விகிதம், குறைந்த ஆயுள், படிப்பு முடியும் முன்பே பள்ளியை விட்டு விலகுதல், அதிமான குற்றச் செயல்கள், அதிகமானோர் மதுவுக்கு அடிமையாதல், அதிகமான போதைப் பித்தர்கள், அளவுக்கு அதிகமான குற்றவாளிகள், இந்த விரும்பப்படாத குறியீடுகளில் நாம் முதன்மை வகிக்கிறோம் என்பது வேதனை அளிக்கும் விடயமாகும்.

70 களில் அரசாங்கத் துறைகளில் 17% இருத்த இந்தியர்களின் நிலைமை இன்று 5% க்கு குறைவாகவே இருக்கிறது .அரசு சார்ந்த நிறுவனங்களோ பூமி புத்ராக்களையே வேலைக்கு எடுத்துக் கொள்கிறது. சீனர்களோ தனியார் துறைகளில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இந்தியர்களுக்கென்று என்ன இருக்கின்றது? அவர்கள் எங்கு வேலை தேடிப் போவார்கள்? தோட்டங்களில் வழ்ந்த போது ஓரளவு கட்டுக் கோப்புடன் வாழ்ந்த சமுதாயம் இன்று அங்கிருந்து நகர்புறத்திற்கு வலுக்கட்டயமாக மாற்றலான போது, சரியான வாய்ப்புகளும் வழிகாட்டியும் அரசாங்கத்தால் வழங்கப்படாத காரணத்தினால் இன்று இந்த அவலங்களை இந்தியர்கள் எதிர் நோக்க வேண்டியிருக்கின்றது..

ஆகவே இதனைக் கருத்தில் கொண்டு ஒரு சிறப்பு நாடளுமன்ற குழுவை அமைத்து இந்தியர்களிடயே நிலவும் பிரச்சனைகளைப் பற்றி ஆராய்ந்து அதற்கான தீர்வுகள் கான வழி வகுக்கப்படவேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
..கா பரிந்துரை செய்யுமா ?

Comments